For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்...! - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...

07:10 AM Feb 08, 2024 IST | Web Editor
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்       பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement

பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய சபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

Advertisement

வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது.

இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகர் என்வரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், 14 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் பிஷின் நகர துணை காவல் ஆணையர் ஜூம்மா தாத் கான் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கான்சாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்துக்குள் இரண்டாவது குண்டுவெடிப்பு அதே பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா ஃசைபுல்லா நகரில் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு JUI-F என்ற கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்ததாக கிலா ஃசைபுல்லா நகர துணை ஆணையர் யாசிர் பசாய் தெரிவித்துள்ளார். இவ்விரு குண்டுவெடிப்புகளுக்கும் இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தாலிபன், பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஆகியவை இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Advertisement