நாடாளுமன்றமே முதன்மையானது: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து!
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய அவர், “நீதித்துறை சூப்பர் பார்லிமெண்ட் ஆக முடியாது என்றும், அரசியலமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே என துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்திருந்தார்.
ஜகதீப் தன்கரின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தை விட மேலான அமைப்பு ஏதும் இல்லை என பேசியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
“நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை.
இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இரு விதமான கருத்துகளை கூறுகிறது.
நமது மௌனம் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். சிந்திக்கும் மனங்கள் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பங்களிக்க வேண்டும். ஒரு அமைப்பை சீர்குலைப்பதையோ அல்லது தனிநபர்களைக் களங்கப்படுத்துவதையோ நாம் அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது.” என தெரிவித்தார்.