பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தவெக தலைவர் விஜயுடன் சந்திப்பு!
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்பு மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பு சார்பில் சுமார் 15 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பரந்தூர் போராட்ட குழு தலைவர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “ தவெக தலைவர் பரந்தூர் பகுதிக்கு நேரில் வந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்க ஏற்கெனவே நேரம் கேட்டிருந்தோம். அவர் வேலை பளு காரணமாக நேரம் கொடுக்காமல் இருந்த நிலையில், இன்று நேரில் வந்து நன்றி தெரிவித்தோம். மாநில அரசு கைவிடும் வரை உடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். மிகுந்த மனநிறைவுடன் வந்துள்ளோம்.
அங்க இருக்கக்கூடிய சூழல்கள் குறித்து மனு கொடுத்துள்ளோம். பரந்தூர்
போராட்டத்திற்கு விஜய் வந்தது இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாய பெருங்குடி மக்களை எப்படி மதிக்கிறார் என்பது இந்த நிகழ்ச்சி மூலம் தெரிகிறது. ஆனந்த கண்ணீர் விடும் அளவுக்கு உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எந்த சூழலிலும் பக்கபலமாக இருப்பதாக விஜய்
உறுதியளித்துள்ளார். விஜய் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பு சேர்ந்த தமிழ்நாடு மேல்நிலை உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக சார்பில் 12 பேர் அடங்கிய குழு தவெக தலைவர் விஜய்யை சந்தித்து மனு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த பேட்டியில், “வாக்குறுதிகளை அரசு நான்கரை ஆண்டுகளாக செய்யவில்லை.
8 முறை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துள்ளோம்.
இப்போது பழைய ஓய்வூதியத் திட்டம் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்திதான் விஜய்யை சந்தித்தோம். இந்த அரசை நம்பி நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளோம். எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். போராட்டத்திற்கு தமிழ்நாட்டில்உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறோம். கோரிக்கை மனுவை விஜயிடம் வழங்கி உள்ளோம். எங்களின் முழு ஆதரவை தருவோம்.. முழு அழுத்ததை தருவோம் என்று விஜய் தெரிவித்தார்” என்று கூறியுள்ளனர்.