For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Paralympics2024 மகளிர் #Badminton போட்டியில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

10:03 PM Sep 02, 2024 IST | Web Editor
paralympics2024 மகளிர்  badminton போட்டியில் வெள்ளி  வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்   பிரதமர்  முதலமைச்சர் வாழ்த்து
Advertisement

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கணைகளான துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கமும், மணிஷா ராமதாஸ் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுவரை இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று ‌பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர்  SU5 பிரிவில் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், இறுதிப் போட்டியில் 21-17, 21-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும், 2ம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு நடப்பு ஒலிம்பிக்கில் 11வது பதக்கம் கிடைத்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

அதேபோல், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனிஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரனை நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவிற்கு 12வது பதக்கம் கிடைத்தது. பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீராங்கணைகள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் மற்றும்வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸ் இருவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “பாராலிம்பிக்ஸ்2024ல் பெண்களுக்கான பேட்மிண்டன் SU5 போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமையின் ஒரு தருணம்! அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. துளசிமதிக்கு வாழ்த்துக்கள்” என பாராட்டியுள்ளார்.

அதேபோல், “பாராலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் SU5 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸின் சிறப்பான முயற்சி, அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்த நம்பமுடியாத சாதனைக்கு வழிவகுத்தது. மனிஷாவிற்கு வாழ்த்துக்கள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1830638898441269284

வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “பாராலிம்பிக்ஸ்2024ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்!” என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement