போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் பரப்பப்படுவதாக புகார் - பேஸ்புக்கை முடக்கியது பப்புவா நியூ கினியா!
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று பேஸ்புக். இதன் மூலம் மில்லியன் கணக்கானோர் வலை தள கணக்குகளை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் வலை தளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சுமார் 20 லட்சம் வசித்து வருகின்றனர். இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. இங்குள்ள பொதுமக்கள் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியானது.
அதன்படி, பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.