ஹீரோ ஆனார் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலமாக பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு குமாரசம்பவம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 12ல் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் பாயல் ராதாகிருஷ்ணா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய குமரன்,
”குமாரசம்பவம் படத்தில் 'சினிமா என் லட்சியம்' என்றொரு டயலாக் வரும். உண்மையில் அது எனது 17 ஆண்டு கால இலட்சியம். சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவை நனவாக்கிவிட்டது. என்னுடைய குடும்பத்தினருக்கு திரை உலக பின்னணி கிடையாது. அப்பா டீ கடையில் வேலை பார்த்தவர். அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். இவருக்கும் அந்த ஆசை இருந்தது. அவருடைய கனவை நான் நனவாக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் யூட்யூப் தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். இன்று இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தரமான படைப்பை வழங்கி இருக்கிறோம்”
என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் பாலாஜிவேணுகோபால்,
“இதற்கு முன்பு 'லக்கி மேன்' படத்தை இயக்கினேன். இது 2வது படம். இது ஒரு போராளி பற்றிய கதை. ஆனால் அவனது போராட்டத்தை பற்றிய கதை அல்ல. இது ஒரு ஃபிலிம் மேக்கரின் கதை. ஆனால் அவர் படம் எடுத்த கதை அல்ல. இந்த திரைப்படத்திற்கு கடவுளின் அனுகிரகம் இருக்கிறது என்பதனை நான் உணர்ந்தேன். நான் லக்கி மேன் படத்திற்காக முதலில் வைத்த பெயர் கந்தன் கருணை. ஆனால் அந்த டைட்டில் எனக்கு கிடைக்கவில்லை. நான் அடிப்படையில் ஒரு முருக பக்தன். ஒரு முறை பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று முருகரை வணங்கிக் கொண்டிருந்தபோது உமது பெயரை என்னுடைய திரைப்படத்திற்கு வைக்க முடியவில்லை என வருந்தினேன். அதன் பிறகு முருகன் எனக்கு எப்படி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்றால்.நாயகன் பெயர் குமரன், படத்திற்கு டைட்டில் குமாரசம்பவம், குமரவேல், ஜி எம் குமார், பால சரவணன், நிகில் முருகன் என முருகரின் பெயரைக் கொண்டவர்கள் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். நான் இதற்கு மேல் முருகரிடம் கேட்க இயலாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.