பழனி | சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர். அப்போது, செல்வமணி (47) என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக செல்வமணியை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல், ராமேஸ்வரம் கோயிலில் வடமாநில இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவர்களின் உயிரிழப்புகளைத் தொடர்ந்து கோயில்களில் பக்தர்களுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்ததாக அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.