பாகிஸ்தான் : கட்சிப் பேரணியில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் - 11 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதனிடையே பேரணி முடிந்த பிறகு பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, வாகன நிறுத்துமிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் கட்சி உறுப்பினர்கள் என கூறப்படுகிறது. பேரணியில் கலந்துகொண்ட கட்சியின் மூத்த தலைவர் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.