பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து!
3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இந்நிலையில், அதிகபட்ச தொகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா நேற்று (ஜூன் 9) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், செஷல்ஸ் துணை அதிபர் அகமது அதிஃப் ஆகிய 7 அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி தூய்மைப் பணியாளர்கள், என பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 8000 பேர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் : 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!
நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டதும் உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு இன்று (10.06.2024) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.