“நமது கனவு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டுமல்ல... பசுமை பொருளாதாரமும்தான்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக சுற்றுசூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ‘உலக சுற்றுச்சூழல் தின’ விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
“நாம் செய்கின்ற செயல், நம் குழந்தைகளுடைய எதிர்காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காடுகள்தான் புவியின் நுரையீரல். அப்படிப்பட்ட காடுகளை பாதுகாக்கும் வனக்காவலர்களின் நியமன ஆணையை வழங்குவதில் நான் இன்று மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள்தான் நம் காடுகளின் முதுகெலும்பு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நாயகர்கள் நீங்கள்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை. அந்த அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தொலைநோக்கு பார்வையுடன் பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழ்நாடு க்ரீன் க்ளைமேட் கம்பெனி என்ற காலநிலை மற்றும் சுற்றுசூழல் கட்டமைப்பை உருவாக்கினோம். அதன்கீழ் நான்கு முதன்மை இயக்கங்களை அமைத்துள்ளோம்.
முதலாவதாக தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலமாக 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். வனப்பரப்பை அதிகரித்துள்ளோம். இரண்டாவதாக தமிழ்நாடு ஈரநில இயக்கம் தொடங்கி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக ராம்சார் அங்கீகாரம் பெற்ற 21 ஈரநிலங்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என சாதனை படைத்துள்ளோம்.
மூன்றாவதாக தமிழ்நாடு காலநிலை திட்டம் மூலம், கார்பன் எபிஷனை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்துகொண்டு வருகிறோம். நான்காவதாக தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் மூலம், உலக வங்கியுடன் இணைந்து ரூ.1675 கோடி மதிப்பீட்டில், முக்கிய கடலோரப் பகுதிகளின் தாங்கும் திறனை வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் ஏழாயிரம் ஏக்கருக்கும் அதிகமான அறுபத்தைந்து புதிய வன காப்பகங்களுக்கு, அறிவிக்கை செய்து சட்டபூர்வ பாதுகாப்பு அளித்துள்ளோம். நமது கனவு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டுமல்ல. அது ஒரு பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும். மஞ்சப்பை திட்டம் அரசின் திட்டமாக இருந்தால் போதாது. அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அரசு திட்டத்தை கொண்டு வரத்தான் முடியும். அதனுடைய வெற்றி மக்கள் கையில்தான் உள்ளது. நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என்பதுதான் இந்த ஆண்டு சுற்றுசூழல் தினத்தின் கரு”. எனக் கூறினார்