பிப்.17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப். 12) உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலை, அசோகா ஹோட்டலில் உள்ள டாக்டர் கேபிஎம் ஹாலில் 17-02-2025 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.