அதிமுகவை இ.பி.எஸ். அதளபாதாளத்தில் தள்ளிவிட்டார்! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அதளபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், புகழேந்தி உள்ளிட்ட கழக மூத்த நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முதலமைச்சர் வேட்பாளர் என்றாலும் கட்சியின் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் என எந்தப் பதவி என்றாலும் தான் இருப்பேன் என்ற சிந்தனையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டார்.
தேசிய அளவில் கூட்டணி வைத்திருக்கும் பிரதமர் மோடி அவரது அருகில் எடப்பாடி பழனிச்சாமியை வைத்து பேசியதை மறந்து விட்டு தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது முதல் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து சனி உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்துள்ளது. இப்போது அவரை பிடித்திருக்கும் சனி அவரை வீழ்த்தாமல் விடாது.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே, எனவே இந்த பொறுப்பிற்கு தகுதி இல்லாத எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து அந்த பொறுப்பை ராஜிநாமா செய்ய வேண்டும்.
தான்தோன்றித்தனமான ஆட்களை வைத்து கொண்டு இரு பெரும் தலைவர்கள் வகுத்த விதிகளை காலில் போட்டு மிதித்து அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அதள பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தர்ம யுத்ததை தொடங்கி 30 மாவட்டங்களுக்கு பயணித்துள்ளோம். ஏற்கனவே உள்ள பாஜக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம். அது தொடர்கிறது.
பத்தாண்டுகாலம் சிறப்பாக ஆட்சி நல்ல திட்டங்களை தந்து இந்தியாவின் தகுதியை உலகத்தில் உள்ள 200 வளர்ந்த நாடுகள் பாராட்டும் அளவில் நிலை நிறுத்தி உள்ள பெருமை பாரத பிரதமர் நரேந்திர மோடியையே சாரும். 3 வது முறையும் அவரே வெற்றி பெற வேண்டும் என்றும் பிரதமராக அவரே வர வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதற்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது.
தமிழகத்தில் உள்ள எந்த கட்சியுடனும் இது வரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை
நட்டா வருகிறார் அதன் பின்னரே பேச்சுவார்த்தை நடத்துவார். அதிமுகவை அழைத்துள்ளதாக செவிவழி பொய் செய்தி தான் பரவுகிறது. அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை. இரட்டை இலையை எங்களிடம் கொடுங்கள் எங்களிடம் தொண்டர்களும் பொதுமக்களும் உள்ளனர் என தான் கேட்கிறோம். அரசியல் களத்தில் விஜய் வெற்றிபெற வாழ்த்துகிறேன்”
இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.