எதிர்க்கட்சியினர் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. அவை கூடியதும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதேபோல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 35 நோட்டீஸ்களை தாக்கல் செய்த நிலையில் அதனை மாநிலங்களவை துணைத்தலைவர் நிராகரித்தார். இதனால், எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவையும், மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது..