“பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆபரேஷன் சிந்தூர் கையிலெடுக்கப்பட்டது” - விங் கமாண்டர் வியோமிகா சிங்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, “பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான தெளிவுகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளன. தீவிரவாத கட்டமைப்புகள் தீவிரவாத முகாம்களை குறி வைத்தே இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா தற்போது எடுத்த நடவடிக்கை என்பது மிகைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல. இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை என்பது துல்லியமாக திட்டமிட்டு எடுக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு நடவடிக்கை” என தெரிவித்தார்.
தொடர்ந்து விங். கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய கமாண்டர் வூமிகா சிங்,
“பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் சரியாக துல்லியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
துல்லியமான உளவுத்துறை தகவல்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கையாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்துள்ளது” என தெரிவித்தார்.