''என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்... எல்லா அதிகாரமும் எனக்கு உண்டு'' - ராமதாஸ் பரபரப்பு பேட்டி
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தீர்வு இருக்கத்தான் செய்யும், அப்படியாக ஒரு தீர்வு வரும். 46 ஆண்டு காலமாக கட்சி, சங்கம் இரண்டையும் வழிநடத்தி வருகிறேன். சங்கத்தின் தலைவராக பூ.அருள்மொழியும் கட்சியின் தலைவராக நானும் இருக்கிறேன். மேலும் 34 துணை அமைப்புகளை உருவாக்கியுள்ளேன். அதற்கெல்லாம் அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறேன். இந்த 34 அமைப்புகளும் திறம்பட செயல்பட இனி அவர்களை முடித்துவிட்டு உற்சாகப்படுத்தி அவர்களுடைய பணியை வேகமாக தொடரச் செய்ய அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கப் போகிறோம்.
அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம். இங்கே வந்துள்ள மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில பொறுப்புகள்தான் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இவர்களை தான் தேர்தலில் போட்டியிட நான் தேர்ந்தெடுப்பேன். இங்கு வந்துள்ளவர்கள்தான் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு.
நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்லவர்களை, வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவேன். போகப் போக தெரியும். கூட்டணியை பற்றி இப்போது சொல்லக்கூடாது. கூட்டணி இதுவரை முடிவாகவில்லை. நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறுகின்ற கூட்டணியாக இருக்கும்"
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.