பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி - வேட்பாளராக பாரிவேந்தர் மீண்டும் போட்டி!
மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு செய்யும் பணிகளில் அதிமுக, பாஜக வேகமாக செயல்பட்டு வருகின்றன. இதில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் , புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளது.
இதன்படி இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் பெரம்பலூரில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற பாரிவேந்தர் தற்போது பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். பெரம்பலூர் தொகுதியில் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.