ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.
இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், கடந்த மார்ச் 18ம் தேதி காசா மீது தாக்குதல்களை தொடங்கியது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்வதற்கும் இஸ்ரேல் தடை விதித்தது. தொடரும் உணவுப் பற்றாக்குறையால் காசா பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துவருகிறது.
பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் மாதம் முதல் இஸ்ரேலின் பட்டினிக் கொள்கையால் 326 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இன்று அதிகாலை முதலே நடைபெற்ற தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.