For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை - ப.சிதம்பரம் பேட்டி.!

06:29 PM Feb 01, 2024 IST | Web Editor
வேலை வாய்ப்பு   விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை   ப சிதம்பரம் பேட்டி
Advertisement

வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை - ப.சிதம்பரம் பேட்டி.!

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 57 நிமிடங்கள் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

” இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை.  15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3 % நகர்புறங்களில் 13.8% வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.

30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் 9.8% வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் கூறவில்லை.  கடந்த பத்து வருடங்களாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் கனவுகளை உடைக்கும் வேலையை தான் மத்திய அரசு செய்து வந்துள்ளது.

விவசாயிகள் பற்றி பேசிய நிதி அமைச்சர் விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை,  இடுபொருட்களின் விலை அதிகரிப்பு,  காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் பேசப்படவில்லை.

ஜிடிபி குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை. இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை தெரிவிக்கவில்லை. பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர் உணவுப் பொருட்களின் விலை 7.7% வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.

புதிய கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி அமைச்சர் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்த பணியிடங்கள் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்களாகும்.

கூட்டாட்சி தத்துவம் என்பதை மத்திய அரசு நசுக்கி வருகிறது. மத்திய அரசின் அனைத்து பொருளாதாரக் கொள்கைகளும் நடவடிக்கைகளும் ஏழைகளைப் புறந்தள்ளி பணக்காரர்களுக்கு சாதகமானதாகவே இருந்து வருகிறது. நாட்டின் வெறும் பத்து சதவிகித மக்கள் தொகை கொண்ட நபர்களிடம் 60% பணம் மற்றும் வளங்கள் குவிந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசாங்கம் 2013-14 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியை 6.4% ஆகவும் சராசரி வளர்ச்சியை 7.5% ஆகவும் வைத்து சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜிடிபி வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கு கீழாக குறைத்துள்ளது “ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement