கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்..!
விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நாட்டுக்காக பதக்கங்களை வெல்வேன் என கேல் ரத்னா விருது விவகாரம் தொடர்பாக மனு பாக்கர் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த பட்டியலில் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது இந்திய அளவில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
இதனிடையே, ‘கேல் ரத்னா’ விருதுக்கு மனு பாக்கர் விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், மனு பாக்கரின் தந்தை, ‘தாங்கள் முறையாக விண்ணப்பித்தும் பதிலளிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மனு பாக்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “விருதுக்கான எனது விண்ணப்பத்தில் பிழை இருந்திருக்கக் கூடும். விருதுகளும், அங்கீகாரங்களும் எனக்கு உத்வேகம் அளிக்கும் என்றாலும், அவை எனது நோக்கம் அல்ல; நாட்டிற்காக விளையாடுவதே எனது இலக்கு. விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நாட்டுக்காக பதக்கங்களை வெல்வேன். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு ஊகங்களை யாரும் பரப்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.