தாம்பரத்தில் தனியார் பள்ளியில் அசைவ உணவிற்கு தடை!
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்கள் அசைவ உணவு எடுத்து வர வேண்டாம் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டைக்கூட எடுத்து வரக்கூடாது என பள்ளி நிர்வாகம் கூறியதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகரில் உள்ள The lords international பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவில், அசைவங்களான மீன், இறைச்சி, முட்டை எடுத்து வர அனுமதி இல்லை என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு இ.மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளது. அசைவ உணவுவின் வாசம் அதை சாப்பிடாத குழந்தைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக பள்ளி விளக்கம் அளித்துள்ளது.
மீறி பெற்றோர்கள் அசைவ உணவை கொண்டு வந்தால் அதை குழந்தைகளுக்கு வழங்கமுடியாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.