For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மஹ்மூத் தர்வீஷின் "நாடோடிக் கட்டில்" - நூல் அறிமுகம்

02:12 PM Jan 12, 2024 IST | Web Editor
மஹ்மூத் தர்வீஷின்  நாடோடிக் கட்டில்    நூல் அறிமுகம்
Advertisement

புகழ்பெற்ற ஃபாலஸ்தீன கவிஞரான மஹ்மூத் தர்வீஷின் "நாடோடிக் கட்டில்" எனும் நூல் குறித்த அறிமுகத்தை காணலாம்....

Advertisement

விடுதலைக்கான போராட்ட வடிவங்களில் சொற்களுக்கு முக்கிய பங்கு உண்டு.  போராட்ட வீரியமிக்க சில சொற்கள் தான் ஒரு நாட்டின் விடுதலையை தீர்மானிக்கிறது. அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் ஜூனியரின் “I have a Dream - எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்கிற உரையின் தாக்கம் விடுதலை போராட்ட இயக்கத்தில் பயணிக்கும் உள்ளங்களில் இன்னமும் கணன்று கொண்டிருக்கிறது.

இதே போல லத்தீன் அமெரிக்க நாடான சுதந்திர கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உரைகளும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது மட்டுமின்றி அவை அதே வெப்பத்தோடு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. உண்ண உணவோ,  இருப்பிடமோ,  சுதந்திரமான நடமாட்டமோ என எதற்கும் வழியின்றி காடுகளுக்குள் கொரில்லா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை சொற்களாக அவர் உதிர்த்தார்.  “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என அவர் முழங்கினார். அவரின் வீரியமிக்க சொற்களைப் போலவே வரலாறு அவரை விடுதலை செய்தது மட்டுமல்லாமல் ஃபிடலை எப்போதும் கொண்டாட வழிவகை செய்தது.

இதேபோல தான் விடுதலைக்காக போராடும் ஒடுக்கப்படும் இனத்தின் தரப்பிலிருந்து வெளியாகும் ஒரு இலக்கிய வடிவமானது எத்தனை வீரியம் மிக்கது என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் ஃபாலஸ்தீன கவிஞரான மஹ்மூத் தர்வீஷ்.  அவர் எழுதிய  மூன்று வரிகள் இன்றைய ஃபாலஸ்தீன விடுதலை போராட்டத்திற்கும் பொருந்தும். அவர் இப்படி எழுதினார்..

”நான் வாழும் வரை என் சொற்களும் வாழும்...
சுதந்திரப் போராளிகளின் கைகளில்
ரொட்டியாகவும் ஆயுதமாகவும் அது என்றும் இருக்கும்”.

பாலஸ்தீனையும்,  அதன் வலியையும் தனது கவிதைகளின் வழியாக உலகிற்கு காட்டிய மிக முக்கியமான கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார்.  7 வயதிலேயே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காரணமாக தர்வீஷ் இடம் பெயர்ந்து வெளியேற நேர்ந்தது. அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது.

சிறு வயதிலேயே இன அழிப்பின் மோசமான கொடூரத்தை நேரில் பார்த்தவர் தர்வீஷ் . அதனால் தான் என்னவோ 1950-ம் ஆண்டிலிருந்தே கவிதைகளை எழுதத் தொடங்கினார். தர்வீஷின் கவிதைகள் கோபத்தையும்,  ஆவேசத்தையும்,  வலியையும் ஒருங்கே வெளிப்படுத்தின.  அந்த கவிதைகள் மிகப்பெரும் அதிர்வுகளை உண்டாக்கத் துவங்கின. ”எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைவிட ஒரு படி மேலோங்கியதாக இருக்க வேண்டும்” என்பதே அவரது தத்துவமாக இருந்தது.

மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் சில தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.   இந்த நிலையில் தான் நாடோடிக் கட்டில் எனும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைத் தொகுப்பை அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பேராசிரியர் ஜாகிர் ஹுசைன்.

ஜாகிர் ஹுசைன் மூலக் கவிதையின் உணர்வோட்டத்தை,  அதன் வீச்சைச் சிறப்பாகத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.  நவீன அரபு இலக்கியம் இவர் மூலம் தமிழுக்கு நேரடியாக அறிமுகமாகிறது.  மதச்சார்பற்ற நவீன அரபு இலக்கியம் அரபு மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மிகக் குறைவு. இப்பின்னணியில் இத்தொகுப்பு முக்கியமான ஒன்றாகும்.

பேராசியர் ஜாகீர் ஹுசைன் சென்னை பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் பார்சி மொழித்  துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.  தமிழில் இருந்து ஆத்திச்சூடி மற்றும் திருக்குறளை நேரடியாக அரபிக்கு மொழிபெயர்த்த மிக முக்கியான ஆளுமையாக இவர் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மஹ்மூது தர்வீஷின் நாடோடிக் கட்டில் எனும் இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

- ச.அகமது , நியூஸ் 7 தமிழ் 

Advertisement