“வார்த்தைகள் இல்லை... முற்றிலும் உடைந்துவிட்டேன்” - பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி பதிவு!
17 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது.
பெங்களூரு விதானசௌதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதலமைச்சர் சித்தராமையை, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதான சௌதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியின் பதிவை பகிர்ந்த விராட், “சொல்ல வார்த்தைகள் இல்லை. முற்றிலும் மனம் உடைந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.