"காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்" - அமெரிக்கா எச்சரிக்கை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு காஷ்மீருக்கோ, இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கோ செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அரசு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது. காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதிகளான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடக்கின்றன.
ஆகவே, அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல வேண்டாம். மேலும், ஆயுத மோதலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.