“விபத்துக்குள்ளான விமானத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை” - துருக்கி தகவல் தொடர்பு இயக்குநரகம்!
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன்.12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் 787-8 வகை பணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமான விழுந்த பிஜே மருத்துவ மாணவர்கள் விடுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டு, விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தை தொடர்புபடுத்தி ‘துருக்கி டெக்னிக்’ என்ற நிறுவனம் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 வகை பணிகள் விமானத்தை பராமரித்ததாக யோக குரு ராம்தேவ் உட்பட சமூக வலைத்தளங்களில் பலர் பேசினர். இந்த நிலையில் அதற்கு துருக்கி அரசு மறுப்பு தெரிவித்து தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு தகவல் தொடர்பு இயக்குநரகம் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “போயிங் 787-8 பயணிகள் விமானத்தின் பராமரிப்பு 'துருக்கிய டெக்னிக்' நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது' என்ற கூற்று தவறானது என்றும் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஏர் இந்தியாவுடான துருக்கிய டெக்னிக் செய்த ஒப்பந்தங்களின்படி, B777 வகை விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இன்றுவரை, துருக்கிய டெக்னிக் நிறுவனம் போயிங் 787-8 வகை விமானத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. அப்போது துருக்கியின் ட்ரோன்களை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியதாக, துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவத்தின் சேவைகளை இந்தியா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.