அடுத்த ஷாக்... மேலும் 480 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் அமெரிக்க குடியேற்றக் கொள்கையும் ஒன்று. இதன்மூலம் அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி புலம்பெயர்ந்தோரைக் கண்டுபிடித்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக 104 இந்தியர்கள் 'சி-17' ரக விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர். அவர்கள் கைவிலங்கு போட்டு அழைத்து வந்தது நாடு முழுவதும் எதிர்ப்பலைகளைத் தூண்டியது.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா அரசுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், பிப்.12ல் பிரதமர் அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.