காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் என்ன? - டெல்லியில் நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் குறித்து நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஒரு மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.