நியூஸ் 7 தமிழ் எதிரொலி | வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு மூலம் மீட்கும் பணி!
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து , நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மாவட்ட நிர்வாகம் படகு மூலம் மீட்கும் பணியை தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் மழைநீர் புகுந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி இணைப்பு பேருந்து நிலையம் அமைந்துள்ள சிந்து பூந்துறை பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியான இங்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் உணவின்றி தவித்து வந்த நிலையில், இது குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாக தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமார் நேரலை மூலம் வழங்கினார். இதனையடுத்து, தற்பொழுது மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் ஆணையர் தலைமையில் இடிந்தகரை பகுதியில் இருந்து மீனவர்கள் வரவழைக்கப்பட்டு படகு மூலம் மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக இரண்டு படகுகளில் இந்த மீட்புப்பணியானது தொடங்கியுள்ளது. 24 மணி நேரமாக உணவின்றி தவித்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் சேர்க்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் படகு மூலம் மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
படகு மூலம் மீட்கப்பட்ட மக்கள், நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்தனர்.