"எச்1-பி விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டண நடைமுறை பொருந்தாது" - வெள்ளை மாளிகை அறிவிப்பு!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2 ஆம் முறை பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருபவர்களுக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவருக்கான எச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளனர். அதன்படி, இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளார். இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று எச்1பி விசா. அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். இதன்மூலம், உண்மையிலேயே திறமையான, அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாததை செய்யக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து எச்1-பி விசா வைத்திருப்பவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப குடியேற்ற அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. விடுமுறை, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த நாடு சென்றுள்ள மேற்படி விசாதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 24 மணி நேரத்துக்குள் அதாவது 21ம் தேதிக்குள் அமெரிக்கா திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 'எச்1-பி' விசா கட்டண உயர்வு தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க விசா கட்டண உயர்வு புதிதாக விசா கேட்டு விண்ணப்பம் செய்பவருக்கு மட்டும் தான் 1 லட்சம் டாலர் கட்டணம். ஏற்கனவே எச்1-பி விசா வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த புதிய கட்டண நடைமுறை பொருந்தாது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.