தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில், இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 3ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் வெளியிட்ட இந்த மாற்றமானது, உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை திறம்பட பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்,
"2025 ஜூலை 1 முதல், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யலாம். 2025 ஜூலை 15 முதல், ஆதாருடன் ஓடிபி அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாகும். அதிகாரபூர்வ பிஆர்எஸ் கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் ஓடிபியை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். இது 2025 ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.
அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். குளிர்சாதன வகைகளுக்கு: காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை. சாதாரண வகைகளுக்கு: காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை.
இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.