முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் - பட்டுக்கோட்டையில் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி சுசிலா (வயது 55). இவர் முதல்சேரியில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது சுசிலாவின் அக்கா மகனான அன்பழகன் (வயது 30) சுசீலாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அன்பழகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுசிலாவின் இடுப்பு மற்றும் கழுத்து பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் காயமடைந்த சுசிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சுசிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.