நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். இதையறிந்த அவரின் சகோதரரான சுர்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இதையடுத்து, சுர்ஜித் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுர்ஜித்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையாளி சுர்ஜித் பெற்றோர்களான பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் இவர்களது பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக சுர்ஜித், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக அவரது பெற்றோர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; இதில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.