நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு!
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறப்படும் மதிப்பெண்ணை வைத்தே சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்த நிலையில், நீட் முதுநிலைத் தேர்வு (MD, MS மற்றும் PG டிப்ளோமா) ஜூன் 15ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை எதிர்த்து, அதாவது ஒரேநேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உத்தரவிட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை நீட் தேர்வை ஒரேகட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற, NBEMS தற்போது கூடுதல் தேர்வு மையங்களையும், அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் கண்டறிந்து ஏற்பாடு செய்துவருகிறது. இந்த மாற்றங்கள் காரணமாக, தேர்வு ஜூன் 15ஆம் தேதியில் நடத்தப்படாது எனவும், மேலும் புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு தேதி, புதிய நகர அறிவிப்பு சீட்டு மற்றும் நுழைவுச் சீட்டு வெளியீட்டு தேதிகள் ஆகியவை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான natboard.edu.in மற்றும் nbe.edu.in இல் அறிவிக்கப்படும்.