நயன்தாரா திருமண ஆவணப்பட வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
நயன்தாராவுக்கு எதிராக, நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜன.22 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப் படத்தில், நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி, வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும் கூறி, அன்றைய தினம் நடக்கவிருந்த அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைத்தார்.