ஹரியானா முதலமைச்சராக நயாப் சைனி இன்று பதவியேற்பு!
ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு நயாப் சிங் சைனி பதவியேற்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். இந்நிலையில், மனோகர் லால் கட்டார் ராஜினாமாவையடுத்து, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.
பாஜகவில் 1996-ல் இணைந்த நயாப் சைனி, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 2010-ல் நாராயண்கர் தொகுதியில் போட்டியிட்டு மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2014-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநில அமைச்சராக பதவி வகித்தார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குருக்ஷேத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நயாப் சைனி, கடந்தாண்டு ஹரியானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.