போலி செய்திகளை தடுக்க Myth vs Reality இணையதளம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மித் vs ரியாலிட்டி (Myth vs Reality) என்ற இணைய பக்கத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டார். இதன்படி,ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மித் vs ரியாலிட்டி (Myth vs Reality) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் போலி செய்திகள் மற்றும் கட்டுக்கதைகளை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய விவரங்களை மித் vs ரியாலிட்டி என்ற இணைய பக்கத்தில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைதளங்களில் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதுடன், போலி செய்திகளை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது,
“சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொய்ச் செய்திகளை உருவாக்குபவர்கள் மீது தற்போதுள்ள சட்டத்துக்கு உட்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்ப சட்டம் 79(3)(B)-ன்படி, சட்டவிரோத பதிவுகளை நீக்குவதற்கு மாநில தேர்தல் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும். மாறாக மக்களை பிரிப்பதாக இருக்கக்கூடாது. பிரச்னைகளின் அடிப்படையில் பிரசாரம் இருக்க வேண்டும். வெறுப்பு பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் வாக்கு கோர கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது. நாகரீகமான முறையில் வாக்கு சேகரிக்க வேண்டும்.
சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் போலி செய்திகள் மற்றும் கட்டுக்கதைகளை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய விவரங்களை மித் vs ரியாலிட்டி என்ற இணைய பக்கத்தில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களை / விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். விளம்பரங்களை செய்தியைப் போல வழங்கக்கூடாது. எதிர்தரப்பை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது. நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.