பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்பு!
உத்தரபிரேதசத்தில் வெளி பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் மொயின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். சில நாட்களாக மொயினை பார்க்க முடியாததால் அவரது சகோதரர் சலீம் மற்றும் அவரது மனைவி, மொயினின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீடு வெளி பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மொயினின் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது சகோதரர் அச்சமடைந்தார்.
சலீம் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் கதவை உடைத்தனர். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பூட்டிய வீட்டிற்குள் மொயின் மற்றும் அவரது மனைவி, 3 குழந்தைகள் என அனைவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.