மாயமான ரஷ்ய விமானம் விபத்து - 49 பேரும் பலி!
அங்காரா ஏர்லைன்ஸின் AN-24 விமானம் இன்று பகல் உள்ளூர் நேரப்படி பகல் 1 மணி அளவில் பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் இருந்து தைண்டா நகரை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில், 6 விமானப் பணியாளர்களும், 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகளும்,பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், சீனாவின் எல்லை அருகேவுள்ள கிழக்கு ஆமூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, விமானம் அதன் தொடர்பை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷிய பேரிடர் அமைச்சகம், உடனடியாக விமானத்தை தேடும் பணியை தொடங்கியது. விமானம் ரேடாரில் இருந்து மறைந்த பகுதியில் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியை தொடங்கினர்.
இந்த நிலையில், தைண்டாவு நகருக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில், விமானம் சிதறுண்டு கிடப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. மேலும், ரஷிய பேரிடர் அமைச்சக அதிகாரிகள் இந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், கூடுதல் குழுவினரை விபத்து பகுதியில் மீட்புப் பணிகளுக்காக ரஷிய அரசு அனுப்பிவைத்துள்ளது.