“தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்” - இபிஎஸ்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (82) - பர்வதம் (75) தம்பதியினரை பக்கத்து வீட்டுக்காரர் ரமேஷ் (46) நேற்று இரவு வெட்டிக் கொலை செய்தார். ஆடு, கோழி மேய்ச்சல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோம் காரணமாக இக்கொலை சம்மபவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்மபவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,வாழத்தகாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?
திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், அன்றே இந்த திமுக அரசு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா? அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை ‘தனிப்பட்ட பிரச்சனைகள்’ என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்.. ‘வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை’ என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது , சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது , இரும்புக்கரம் என்று வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது , ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.