"என் பேரனின் முதல் மைல்கல்.." - நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனிடையே தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கடந்த நவ.21ஆம் தேதி தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கி, சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம் இருவரும் தற்போது ஆதிகாரப்பூர்வமாக பிரிந்தனர்.
First milestone crossed my lovable grandson 💐 congratulations yathra kanna ! ❤️❤️ pic.twitter.com/D15JexNw4g
— Rajinikanth (@rajinikanth) May 31, 2025
இந்த சூழலில், இவர்களின் முதல் மகனான யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் எடுத்த புகைப்படங்களை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். அதில் “Proud Parents” என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என் அன்புக்குரிய பேரனின் முதல் மைல்கல். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் அவரது பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.