"இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்" - பிரதமர் மோடி புகழாரம்!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா விஜயகாந்த் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,
"கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று.
தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை அன்பாக அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக்குறைவோடு இருந்த போது அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்! நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.