Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிராமம் முழுதும் வீசிய பிரியாணி மணம் - மதுரை முனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்..!

10:42 AM Jan 27, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி கோயிலில் 89-ம் ஆண்டு பிரியாணி திருவிழாவில் பிரியாணி விருந்து களைகட்டியது.

Advertisement

மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த மக்கள் வருவது வழக்கம். கோயிலில் மக்கள் என்ன வேண்டிக்கொள்கிறார்களோ, அந்த வேண்டுதல் நிறைவேறிய பின், அதற்கு நேர்த்திக்கடனாக ஆடு, சேவல் போன்றவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் சுமார் மூன்று நாட்கள் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர் விரதம் மேற்கொள்கின்றனர். பின் திருவிழா அன்று தங்கள் தொழில் செழிக்க பிரியாணி சமைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர். மக்களால் நேர்த்திக்கடனாக செலுத்திய ஆடுகள் மற்றும் சேவல்களை திருவிழா அன்று சமைத்து, பிரியாணி செய்து பிரசாதமாக வழங்குகின்றனர்.

இரவு முழுவதும் நடைபெறும் இந்த திருவிழாவில் வழக்கமாக 5000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வர். சுற்று வட்டாரத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பிரியாணியை அதிகாலை 5 மணி முதல் பிரசாதமாக வாங்கி தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வர்.

அந்த வகையில் 89-வது ஆண்டு முனியாண்டி கோயில் திருவிழா நேற்று தொடங்கியது. இரவு முழுவதும் தடபுடலாக தயாரான பிரியாணி, இன்று அதிகாலை பிரசாதமாக பக்தர்களுக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டது. 200 ஆடுகள், 300 சேவல்கள் பயன்படுத்தி 50 அண்டாக்களில் செய்யப்பட்ட பிரியாணியை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். முனியாண்டி கோயில் திருவிழாவால், கிராமம் முழுவதும் பிரியாணி மணம் கமழ்ந்தது.

Tags :
Biriyani FestivalMaduraimuniyandi templeNews7Taminews7TamilUpdatesVadakkampatti
Advertisement
Next Article