"மோடி சுட்ட வடை" - தமிழ்நாடு முழுவதும் வடை விநியோகித்து திமுக நூதன பிரச்சாரம்!
"மோடி சுட்ட வடை" என தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து திமுக நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக எல்லோருக்கும் எல்லாம் என்கிற பெயரில் பொதுக்கூட்டத்தை மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. மேலும் பல பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவார் என புதுவிதமான நூதன பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டனர். மோடி சுட்ட வடை எனக்கூறி, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு பிரதமர் மோடியின் உருவப்படம் மற்றும் மோடி சுட்ட வடை என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களில் வைத்து உளுந்த வடைகளை விநியோகம் செய்தனர்.
திருச்சியிலும் இந்த நூதன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு, மோடி சுட்ட வடை, மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்களுக்கு வடை கொடுத்தனர்.
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.