Miss World 2025 | உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா... பரிசுத் தொகை இத்தனை கோடியா?
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், 72வது உலக அழகி போட்டி கடந்த மே 10ம் தேதி தொடங்கியது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அழகிகளுக்கு இடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, முதற்கட்டமாக நடைபெற்ற போட்டிகளில் வென்று, 40 பேர் காலிறுதி போட்டிக்கு தேர்வாகினர்.
இதையும் படியுங்கள் : அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… காலையிலேயே வணிகர்களுக்கு வந்த குட்நியூஸ்!
அவர்களில் 8 பேர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். அந்த எட்டு பேரில் இந்திய அழகி நந்தினி குப்தா இடம்பெறவில்லை. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் நேற்று பிரமாண்டமாக இறுதி போட்டி நடைபெற்றது. இதில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா (23) உலக அழகி பட்டம் வென்றார்.
அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தை அணிவித்தார். ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த ஹாசெட் டெரஜி இரண்டாவது இடத்தையும், ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த மஜா கிலாஜ்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். உலக அழகி பட்டம் வென்ற ஓபல் சுசாட்டாவுக்கு பரிசுத்தொகையாக ரூ.8.5 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பரிசுத்தொகையை தாண்டி விளம்பரதாரர்கள் சார்பிலும், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
யார் இந்த ஓபல் சுசாட்டா?
தாய்லாந்தின் புக்கட் தீவைச் சேர்ந்தவர் ஓபல் சுசாட்டா. இவர் கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் மூன்றாவது ரன்னர் ஆக தேர்வானார். தற்போது அவர் தம்மசாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் இளங்கலைப் படித்து வருகிறார்.