வெள்ள பாதிப்புகளை பார்வையிட நெல்லை விரையும் அமைச்சர் உதயநிதி!
நெல்லை, தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடவும், மீட்பு பணிகளை கண்காணிக்கவும் அமைச்சர் உதயநிதி நேரில் செல்கிறார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலையில் கழுத்தளவு தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடவும், மீட்பு பணிகளை கண்காணிக்கவும் அமைச்சர் உதயநிதி நேரில் செல்கிறார்.