செங்கல்பட்டு மற்றும் ஆம்பூரில் லேசான நிலஅதிர்வு | ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!
செங்கல்பட்டை மையமாகக் கொண்டு 3.2 ரிக்டர் அளவில் லேசான இன்று காலை 7.39 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை 7.39 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் சுமார் 100 கி.மீ. சுற்றளவு வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளிலும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.
அதே போல், கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இன்று காலை 6:52 மணிக்கு இப்பகுதியில் நடுக்கம் உணரப்பட்டது.