For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

08:02 PM Dec 07, 2023 IST | Web Editor
“டிச 11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் ”   பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்  விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கு ஒவ்வொரு நாளாக தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து வந்தது. இதனை தொடர்ந்து, டிசம்பர் 11 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

மிக்ஜான் புயல் விடுமுறைக்குப் பின் பள்ளிகள்  11.12.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும். மேலும், பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  அறிவுரைகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

  •  தலைமை ஆசிரியர்கள் 08.12.2023 முதல் பள்ளிகளுக்குச் சென்று பள்ளிகள் திறக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • பள்ளி வளாகம் முழுமையாக துாய்மை செய்தல் வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்கள் ஏதேனும் இருப்பின் அவை அகற்றப்படுதல் வேண்டும்.
  • தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களையும், கட்டட இடிபாடுகளையும் அகற்றிட வேண்டும்.
  • பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து கொடிய விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • கழிவறைகளின் கதவுகளை சரிசெய்து, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • விளையாட்டுத் திடலை மேடு பள்ளங்கள் இன்றி சமன்படுத்தி பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றிட வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்வதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
  • குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பள்ளி வளாக துாய்மைப் பணி மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு NSS, JRC, Scout, NCC, NGC உள்ளிட்ட அமைப்புகள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களது கூட்டு முயற்சியில் சரி செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து பள்ளிகளும் 11.12.2023 முதல் முழுமையாக செயல்படவும்,  அரையாண்டுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடம் தராமல் திட்டமிட்டு நடத்திடவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement