போரூர் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கி.மீ. தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் - எல்&டி அருகே மெட்ரோ ரயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே ராட்சத 'கர்டர்' அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சுமார் 40 அடி நீளமுள்ள ராட்சத 'கர்டர்' நேற்று இரவு திடீரென சரிந்து கீழே மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அப்போது பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார், பரங்கிமலை போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரயில்வே பணி அதிகாரிகள் விரைந்து வந்து சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். மேலும் கீழே விழுந்த 2 ராட்சத 'கர்டர்'களை ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.