பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமானது மயிலாடுதுறை! அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்த்ததற்கான அறிவிப்பு இன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் சோ்க்கப்பட்டு அதற்கான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மசோதாவில், தமிழ்நாடு பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்த முதல்வா் தலைமையில் தனி அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 20-க்கும் மேற்பட்டோா் இடம்பெற்றுள்ளனா். அவா்களுடன் நீா்வளத் துறை அமைச்சா் மற்றும் அந்தத் துறையின் செயலா், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் அமைச்சா் மற்றும் அந்தத் துறையின் செயலா் ஆகியோரை இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டமும் இணைக்கப்படுகிறது. வேளாண் மண்டலச் சட்டத்துக்குள் வேளாண்மையுடன் கால்நடை பராமரிப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளமும் சோ்த்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு சட்ட மசோதா வழிவகை செய்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்த்து இன்று (03.01.2024) அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.