மயிலாடுதுறை | 45வது ஆண்டுக்கான ரேக்ளா பந்தயம் - பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் குதிரை மற்றும் மாடுகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எப்படி சிறப்போ அதுபோன்று பாரம்பரிய திருவிழாவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் காணும் பொங்கல் அன்று ரேக்ளா பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் காணும் பொங்கல் தினமான இன்று 45ஆம் ஆண்டுக்கான திருக்கடையூர் முதல் தரங்கம்பாடி வரை 10 கி.மீ நடை பெறும் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளுக்கான ரேக்ளா பந்தயத்தில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாடு மற்றும் குதிரை வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டியினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியை அசைத்து துவங்கி வைத்தார். மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு என மூன்று பிரிவுகள் உள்ளது. அதே போல் குதிரை வண்டிகளுக்கான கரிச்சான் குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை என மூன்று பிரிவுகளாகவும் மாலை வரை ரேக்ளா பந்தயங்கள் நடைபெருகிறது.
மேலும் வெற்றி பெரும் முதல் மூன்று மாடு மற்றும் குதிரையின் வீரர்களுக்கு
ரொக்க பரிசுகள், சான்றிதழ்கள், பரிசு கோப்பைகளும் வழங்கப்படும். இந்த பாரம்பரியம் மிக்க திருக்கடையூர் ரேக்ளா பந்தயத்தை காண்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரகணக்கான பார்வையாளர்கள் 5 கி.மீ தூரம் சாலையில் இருபுறமும் இருந்து கண்டுகளித்து வருகின்றனர். இந்த பந்தயத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்காணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.