”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” - பிரேமலதா விஜயகாந்த்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின் போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தே அவர் தன் பணிகளைக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
மேலும் மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாளில் வீடு திரும்புகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியடைகிறது. அவர் பூரண நலம் பெற்று நீடூடி வாழ வேண்டும். மக்கள் பணிகளை மீண்டும் தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.